ஜெரமி கோர்பினுக்கு தமிழர் ஆதரவு

Tamilwin August 18, 2016 09:33:00 GMT பிரித்தானியா

நேற்று லண்டனில் ஜெரமி கோர்பினுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டமொன்றில் பல தமிழ் இளையோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் சொலிடாரிற்றி சார்பாகவும் ஜெரமி கோர்பினுக்கு ஆதரவுத் தமிழர் சார்பாகவும் சேனன் அக்கூட்டத்தில் பேசியிருந்தார்.

இங்கிலாந்து எதிர்கட்சி தலைவருக்கு ஆதரவாக அவருடன் இணைந்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஒரு தமிழர் பேசியது இதுவே முதற் தடவையாகும்.

ஜெரமி கோர்பின் 83ம் ஆண்டில் இருந்து தமிழ் பேசும் மக்கள் உரிமைகளை ஆதரித்து வருவதாகவும் அவர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகவும் சேனன் தெரிவித்தார்.

ஜெரமி கோர்பின் முன்வைக்கும் கோரிக்கைகள் இங்கிலாந்து வாழ் மக்களுக்கு முக்கியமானது என்றும் தமிழர் முழு ஆதரவையும் வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்து தமிழ் அமைப்புக்களுக்கு பின்வரும் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளது ஜெரமி கோர்பினுக்கு ஆதரவாக இயங்கிவரும் தமிழ் சொலிடாரிற்றி அமைப்பு.

தழிழ் சொலிடாரிற்றியின் உத்தியோகபூர்வ வேண்டுகோள்

தொழிலாளர் கட்சியின் தற்போதய தலைவராகவும் எதிர் கட்சித் தலைவராகவும் இருக்கும் ஜெரமி கோர்பினை அப்பதவியில் இருந்து வெளியேற்றும் நோக்குடன் கட்சி தலமைக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பதும் அத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பதும் தாங்கள் அறிந்ததே.

கோர்பின் நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஆதரித்து வருபர். வெற்று வாக்குறிதியாக அன்றி – வாக்குகளை வெல்லும் நோக்குக்காக அன்றி – கொள்கைப்பற்றோடு தமிழ் மக்களினதும் மற்றும் ஏனைய ஒடுக்கப்படும் தேசியங்களினதும் விடுதலை உரிமையை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து வருபவர் கோர்பின் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதே போல் பிரித்தானியாவில், அடிப்படைச் சேவைகளான மருத்துவ மற்றும் கல்விச் சேவை முதலான சேவைகளுக்கான நிதி வெட்டப்படுவதற்கு எதிராகவும் -மக்கள் சார்ந்த பொருளாதார அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இயங்கி வருபவர் கோர்பின்.

மேலும் அவர் இராணுவத் தலையீடுகள் மற்றும் கோர யுத்தங்களுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு கொண்டவர். நிறவேறுபாட்டு துவேச நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பவர் கோர்பின்.

கோர்பினின் முற்போக்குக் கொள்கைகள் பிரித்தானியாவில் லட்சக் கணக்கான இளையோரைக் கவர்ந்துள்ளது. ஜெரமி கோர்பினுக்கு ஆதரவாக இரண்டரை லட்சத்துக்கும் மேலானவர்கள் தொழிலாளர் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். கோர்பின் தலமையில் தொழிலாளர் கட்சி ஜரோப்பாவின் மிகப் பெரும் இடதுசாரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

தலமைத்துவக்கான தேர்தலில் கோர்பின் வெல்ல வேண்டும் என்றும் – முற்போக்கு கொள்கைகள் உள்ள அரசியல் முதன்மைப்படவேண்டும் என்றும் ஏராளமான தமிழ் பேசும் மக்களும் விரும்புகிறார்கள். பல தமிழ் பேசும் இளையோர் இணைந்து கோர்பினுக்கான தமிழர்கள் என்ற அமைப்பை உருவாக்கி ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழ் சொலிடாறிற்றி அமைப்பு அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கியுள்ளது மட்டுமின்றி அவர்களுடன் நெருக்கமாக இணைந்து வேலை செய்யவும் முடிவெடுத்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள் தம் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுக்க கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம் இது. இந்த முக்கிய தருனத்தில் நாம் தெளிவன அரசியல் சார் முடிவை எடுக்க வேண்டும் என்றும் எம்மை முற்போக்கு கொள்கைகளுடன் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நாம் விரும்புகிறோம்.

கொள்கை ரீதியாக எமது விடுதலைக்கு ஆதரவளிக்கும் சக்திகளுக்கு எமது ஆதரவை வளங்குவது அத்தியாவசியம். எமது போராட்ட திட்டமிடல்கள் அத்தகய தெளிவுடனும் துணிவுடனும் நிகழ்வது அவசியம். இதனாற்தான் தமிழ் பேசும் அமைப்புக்கள் தமது ஆதரவை கோர்பினுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஆதரவு கோர்பினைப் பலப்படுத்தும். கோர்பின் பலப்படுவது எமது உரிமைக் கோரிக்கைகளைப் பலப்படுத்தும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *