முள்ளந்தண்டு நிமிர்ந்த விலங்குகள்
கீழிருந்து மேலாய் உதிரம் ஓட உலாத்தும் தசை
இரும்புத்தட்டில் உணவுண்டு
இன்னும் இனம் பெருக்கும்
இந்த உயிர்கள் உலோகம் துளைத்துக்குறையும்.
தனி நபர் வழிபாடும் தரக்குறைப்பும் செம்புகள் பேணிகள் கூடி வெண்டைக்காய் மூளைகள் விசர்கதையிற் கிறங்கி(ச்)
சமுதாயம் தீக்குளிக்கும்.
தானறியாத் தற்கொலைகள் தேசியக்கதை ஊட்டித் தீ மருகும்.
ஒரு நேரடிச்சொல் தவிர்க்கும் ‘விசர்’ வந்து ‘க்கும். க்கும். க்கும்’ என்று முனகி
தூரக்கிடந்து இன்னுமோர் தானறியா mass தற்கொலைக்குள் .
நான் பொய் பேசத் துடிக்கின்றேன்.
நடித்தோ கிடித்தோ நலம்பெற
உய்யும் உயர்குடிகளில் மிதிபட்டு எதற்கும் தயாராகும் ‘என்’ விலையின்றி கிடைக்கும்.
கவட்டுக்குள் விட்டு படுத்திருக்கும் கைகளைத் தூக்கி வளைத்துக் காற்றை உந்த
அடிமைக் கொதிப்பு மூளை துளைக்காதா?
உள்ளங்கையால் ஓங்கி நிலத்தில் உதைக்க
அதிர்வு
தற்கொலைச் சனத்தை ஒன்று திரட்டாதா?
நண்பனும் திட்டி – கட்டை கடுப்பை கண்மூடித்தனத்தை கடவுளைக் கொல்ல முடியாது
விஞ்ஞானம் பேசி தலைகுனிந்த தற்கொலைக்குள்தான் அவனும் தன் வாழ்நாளை விட்டான்.
நாம் கொலையில் ஈடுபட
“வழி என்ற கதை சிரிப்பானது.. ‘சரி’ என்ற சகிப்பு
மகத்தானது.” (நன்றி நண்பர்)
இதோ என்னை முன்னிலைப்படுத்தி உலகைச் சுற்ற விட்டு
சுண்டிச் சுண்டிப் பார்த்துப் பம்பரமாடும் சுருக்கத்தில்- விடைகளில்லை.
இந்தப்பாதை சோலையிட்டுச் செல்லும் என்று சொல்ல வழியில்லை.
பொறுக்கி நாய்கள் கதைக்கினம்.
எச்சில் உதறிக் குரைக்கினம்.
முன்காலுயர்த்தி ஆயுதம் பிடிப்பதால்
முள்ளந்தண்டு நிமிர்ந்த இன்னுமொரு விலங்கையிட்டு ஊளைகளிடுவினம்.
இனம் இனம் என்று இன்னும் இழுப்பினம்.
க்கும் க்கும் என்று முனகிக்கொண்டே இருப்பேன்.
இனவாத அடக்கலில் முனகல் கூவும்.